India

’மோடி ஆட்சியில் இனி வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை’ : கடும் வீழ்ச்சியில் வாகன உதிரிபாக தயாரிப்பு துறை

இந்திய நாட்டின் பொருளாதார நிலை, வரலாற்றில் இதுவரை அளவுக்கு நலிவடைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக வாகன தயாரிப்பு துறையில் மட்டும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

அதேபோல், வாகன உதிரி பாக தயாரிப்பு துறையில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணமே ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே. சுமார் 8 மாதங்களுக்கு மேலாக ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வாகன விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனத்தின் வருவாயை பெருமளவில் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 1.99 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வருவாய், இந்த ஆண்டு 1.79 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது.

இதுகுறித்து வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தீபக் ஜெயின் கூறுகையில், “தற்போதைய பொருளாதார சூழலில் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை.

குறிப்பாக, வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இது இந்த நிதி ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நிலைமை சீரடைய வாய்ப்பில்லை.

அதுமட்டுமின்றி நடப்பு நிதி ஆண்டில் முதல் பாதியில் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி 10 சதவீதம் சரிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த பாதியில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

Also Read: ஆட்டோ மொபைல் துறையில் 20 ஆண்டுகளில் கண்டிராத வீழ்ச்சி: அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்!