India

“சமஸ்கிருதத்தை விட 2,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி” : மக்களவையில் ஆ.ராசா பெருமிதம்!

மக்களவையில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.

அப்போது, “சமஸ்கிருதம் நாட்டின் தொன்மையான மொழி. அது, விஞ்ஞான மொழியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது” என பேசினார். அவரின் பேச்சுக்கு தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விவாதத்தில் ஆ.ராசா பேசினார்.

அப்போது, “இந்தியாவில் திராவிட பண்பாடு, ஆரிய பண்பாடு என்று இரண்டு கொள்கை சிந்தனைகள் உள்ளன. தமிழ் உள்பட திராவிட மொழிகளுக்கும், சம்ஸ்கிருத மொழிக்கும் சிறப்பு இயல்புகள் உள்ளன. அதனால் எந்த மொழியும் வேறு மொழி மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. நாங்கள் வட மாநிலங்களின் மொழிகளை எதிர்க்கவில்லை” என்றார்.

மேலும் பேசிய அவர், “சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் வரவில்லை. குறிப்பாக திராவிட மொழிகளில் தமிழ் 4,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிக்கது. இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. ஆனால், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது.

Also Read: #LIVE | திராவிட மொழிகளுக்கு சிறப்பு இயல்புகள் உள்ளன: - மக்களவையில் ஆ.ராசா பெருமிதம்!

அவையில் பேசிய பா.ஜ.க எம்.பி.க்கள் சமஸ்கிருதத்தின் மூலம் அறிவியல் கல்வி மேம்படுவதாக பேசுவது வியப்பளிக்கிறது. இதன் மூலம், சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கும் மறைமுக எண்ணம் வெளிப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இன்று சமஸ்கிருதம் அழிந்து வருகிறது. அதனை ஊக்கப்படுத்துவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு, மற்ற பிராந்திய மொழிகளுக்கு வெறும் 12 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏன் இந்த பாகுபாடு?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவையில் தி.மு.க எம்.பி ஆ.ராசா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பா.ஜ.க எம்.பி.க்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். பின்னர், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.