India

கால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற இடத்தில் மற்றொரு பெண்ணின் எரிந்த சடலம் - ஐதராபாத்தில் தொடரும் கொடூரம்!

ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபள்ளியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா. இவர் கடந்த இரண்டு நாடகளுக்கு முன்பு கடத்தப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தியது.

இதில் தொடர்புடைய முகமது அரீஃப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் மற்றும் சிந்தகுந்தா சென்னகேசவுலு ஆகிய நான்கு லாரி ஓட்டுநர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவர் பிரியங்கா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் 25 வயது இருக்கும் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கிடப்பதாக இரவு 9 மணியளவில் அப்பகுதி மக்கள் போலிஸாரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி போலிஸாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் சென்றது. அதன்பின்னர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அசோக் குமார், ஷம்ஷாபாத் உள்ளிட்ட போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கால்நடை மருத்துவர் பிரியங்கா

அப்போது பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது உடனே போர்வையை வைத்து அணைத்து மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலிஸார் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் உடல் எடுக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள கோவில் தினமும் பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக போலிஸார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த பெண் யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் பிரியங்காவை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்த சிறிது நேரத்திலேயே மற்றொரு பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.