India

ஐ.ஐ.டி-யில் கடந்த 2 ஆண்டுகளில் பாதியிலேயே படிப்பைக் கைவிட்ட 2,400 மாணவர்கள் : சாதி பாகுபாடுதான் காரணமா ?

நாடு முழுவதுமுள்ள 23 ஐ.ஐ.டி நிறுவனங்களிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநின்றுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் இருந்து 2,461 மாணவர்கள் இடைநின்று (Drop Outs) வெளியேறியுள்ளனர். அவர்களில் 1,171 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.

டெல்லி ஐ.ஐ.டி-யில் மிக அதிக இடைநிற்றல்கள் நிகழ்ந்துள்ளன. டெல்லி ஐ.ஐ.டி-யில் 782 மாணவர்கள் டிராப்அவுட் ஆகியுள்ளனர். காரக்பூர் ஐ.ஐ.டி-யில் 622, மும்பை ஐ.ஐ.டி-யில் 263, கான்பூர் ஐ.ஐ.டி-யில் 190 மற்றும் சென்னை ஐ.ஐ.டி-யில் 128 மாணவர்கள் டிராப் அவுட் ஆகியுள்ளனர்.

கல்லூரிப் பேராசிரியர்கள், நிர்வாகிகளின் அழுத்தம், சாதிய பாகுபாடு மற்றும் முதுகலை மாணவர்களின் தொல்லை ஆகியவையே அதிகமான இடைநிற்றலுக்குக் காரணங்கள் எனக் குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், வேறு காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் பேராசிரியர்கள்.

"பொதுவாக கல்லூரியில் சேர்ந்தபிறகு ஜூலை மாதத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தல் நடக்கிறது. எம்.டெக்., மாணவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்தபின்னர் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள்" என ஐ.ஐ.டி பேராசிரியர் தீரஜ் சங்கி தெரிவித்துள்ளார்.

"பி.டெக் படிப்பின்போதே இடைநின்று வெளியேறும் மாணவர்கள் பெரும்பாலும் பாடத்திட்டத்தின் அழுத்தத்தை சமாளிக்க முடியாதவர்கள்; பள்ளிகளில் இந்தி வழியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் பலர் புரிந்துகொள்ளல் சிக்கலால் இடையிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்." என பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்க ஏதுவானதாக இல்லை. ஏனெனில், அவை நிர்வாகத்திலும், ஆசிரியர்கள் தரப்பிலும் உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பிராமண சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் இணக்கமாகப் பழகுவதில்லை. இதுவும் அதிகமான இடைநிற்றலுக்குக் காரணம்" என்று கல்வியியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க உரிய முயற்சிகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.