India

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆஜர்! 

சென்னை அருகே உள்ள ஒரு குடோனில் வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரியில் இது தொடர்பான குறிப்புகள் இருந்தன. அதில், போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகள், மத்திய கலால்துறை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்கள் ரூ.45 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு, அப்போதைய வருமான வரித்துறை ஆணையர் கடிதம் எழுதியிருந்தார். பின்னர் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ டெல்லி அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் 2 ஐஜிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் தேர்தல் டிஜிபியாக இருக்கும் அசுதோஷ் சுக்லாவிற்கு கடந்த மாதம் சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகாததால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ எச்சரித்தது. இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுக்லா விசாரணைக்கு ஆஜரானதை டெல்லி சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, மேலும் பல போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.