
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் தலைமையில் இருக்கும் நிதிஷ்குமார் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இந்தியா கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
20 ஆண்டுகளாக வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் தவித்து வரும் பீகார் மக்களை மீட்க குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் 20 ஆண்டுகளாக பீகார் மக்களை வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் அதிகாரத்தில் இருக்க எந்த உரிமையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”பீகாரில் 9 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் ஒருபோதும் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவரால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. இளைஞர்களுக்கான வேலையை உறுதி செய்யவில்லை. 20 ஆண்டுகளில் இவற்றை எல்லாம் செய்ய முடியாத நிதிஷ்குமார் அதிகாரத்தில் இருக்க எந்த உரிமையும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.






