
ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் நவ.02 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் SIRஐ எதிர்த்து வருகிறார். இப்போதும் கூட மக்கள் பக்கம் நிற்காமல் பா.ஜ.கவின் பின்னால் ஒளிந்து கொண்டு அ.தி.மு.க வெற்று குரலை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், மக்களை திசை திருப்புவதற்குத்தான் அனைத்து கட்சி கூட்டம் என்று கூறிய ஜெயக்குமாரின் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். ”பா.ஜ.க மற்றும் ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அ.தி.மு.க, வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் குறித்த முன்னெடுப்பை குறை கூறுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.






