samjauhta express
India

சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு ; 4 பேர் விடுதலை

கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி டெல்லியில் இருந்து லாகூர் சென்ற சம்ஜௌதா ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் குழந்தைகள். அதோடு, உயிரிழந்தவர்களில் 42 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் உறுப்பினரும், சாமியாருமான அசீமானந்த், லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சாமியார் அசீமானந்த் மற்றும் லோகேஷ் சர்மா கைது செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் ஜோஷி திடீரென மரணமடைந்தார்.

இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை, அரியானாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பை மார்ச் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. திடீரென, பாகிஸ்தானை சேர்ந்த ராஹிலா எல்.வகீல் என்ற பெண் சார்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த வழக்கு தொடர்பாக, தன்னிடம் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக, அந்த பெண் குறிப்பிட்டார். இதையடுத்து, சிறப்பு நீதிபதி, ஜக்தீப் சிங், வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் அசீமனந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜேந்தர் ஆகியோரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க என்.ஐ.ஏ போலீசார் தவறிவிட்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.