DMK Government

கொரோனா பீதியை கிளப்பிவிட்டு வாக்கு விகிதத்தை குறைக்க திட்டமிடும் அதிமுக? - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 2,000த்தை தாண்டியது. தமிழகத்தில் திடீரென கொரோனா தொற்று பாதிக்கப்படுவதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்ததுதான் காரணம் என்று புதிய காரணம் கூறப்பட்டது.

முன்னதாக கோயம்பேடு மார்க்கெட்டை காரணம் காட்டினர். மேலும் பள்ளி குழந்தைகள் மூலம் பெற்றோர்களுக்கு பரவுவதாக கூறி, அவற்றை மூடினர். அரசு பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டுமே தற்போது பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் தலைமை செயலாளர் கடந்த திங்கள் அன்று அவசர ஆலோசனை நடத்தி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அரசியல் கட்சி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கும் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடும்போது மாஸ்க் அணிவதை உறுதிபடுத்தவேண்டும், மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனாலும் ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒரு பீதியை சுகாதார துறையை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் பொதுமக்களிடம் கிளப்பி வருவதாக எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளனர். பஞ்சாப்பில் 2,600க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். சிறிய நகரமான டெல்லியிலும் 1,500 தாண்டுகிறது.

கேரளா, குஜராத், கர்நாடகாவிலும் அதிக பாதிப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று 2 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது கடந்த மே, ஜூன், ஜூலை பாதிப்பை காட்டிலும் குறைவுதான். மேலும், பீகாரில் தினசரி பாதிப்பு 12 ஆயிரமாக இருந்த நிலையில்தான் அங்கு சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகளவில் பரவுகிறது என்ற பீதியை சிலர் கிளப்பி விட்டு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை குறைக்க திட்டமிட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க ஆளுங்கட்சியினரின் சதி என்றும் கூறினர்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், கொரோனா பீதியை கிளப்பி விட்டால் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட வரமாட்டார்கள். குறைவான வாக்குகள் பதிவானால், ஆளுங்கட்சி வெற்றி பெறலாம் என்ற தப்பு கணக்குப் போட்டு செயல்படுகிறார்கள். இது தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் எதிர்க்கட்சியினர் கூறினர்.

Also Read: கட்டுக்குள் வராத கொரோனா.. ஊரடங்குக்கு தயாராகும் மகாராஷ்டிரா.. என்ன செய்யக் காத்திருக்கிறது மோடி அரசு?