Election 2024
நயினார் நாகேந்திரன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் - CPIM கட்சி கோரிக்கை !
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனிடையே இன்று காலை சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 3 பேரிடம் ரூ.4 கோடி ரொக்கப் பணமும், அவர்கள் மூவரும் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மற்றும் அவரின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், பல லட்சம் மதிப்புடைய கணக்கில் வராத பணமும், பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என CPIM கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள் - உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் ரூபாய் 4.5 கோடி பணத்தை நேற்று (06.04.2024) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
பிடிபட்ட மூன்று நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
உதாரணமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும்.
நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இதேபோன்று பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!