Election 2024
பாஜகவுக்கு எதிராக 400 வேட்பாளர்களை களமிறக்கும் ராஜ்புத் சமூகத்தினர்... தொடரும் போராட்டம் !
நாடளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாஜக மட்டும் ஒவ்வொரு முறையும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் வேட்பாளராக தற்போதுள்ள ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா (Parshottam Rupala) பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது “மன்னர்கள் மற்றும் மன்னர் குடும்பங்கள் கூட ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து, அவர்களுடன் குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
அவர்களுடன் உணவுகளை மாற்றியதோடு, தங்கள் வீட்டுப் பெண்களை திருமணமும் செய்து வைத்தனர். ஆனால் ருக்கி சமாஜ் (தலித் சமூகம்), ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டபோதும், தங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.” என்று பேசினார். சத்திரியர்கள் என்று கூறப்படும் ராஜ்புத் சமூகத்தை குறிப்பிட்டு ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு, அந்த சமூகத்தை சார்ந்த பலரும் கண்டனங்களை எழுப்பினர்.
தொடர்ந்து எழுந்து வந்த கண்டனங்களையடுத்து, தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் ரூபாலா. எனினும் இந்த விவகாரத்தை ராஜ்புத் சமூகத்தினர் விடுவதாக இல்லை. தங்களை அவ்வாறு எப்படி கூறலாம்? என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் ராஜ்கோட் பாஜக வேட்பாளரான ரூபாலாவை மாற்றி, வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பாஜகவை வலியுறுத்தி வருகின்றனர்.
ஒருவேளை பாஜக அப்படி அறிவிக்கவில்லை எனில், பாஜகவை புறக்கணிப்பதாகவும் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ராஜ்புத் சமூகத்தினர் அறிவித்துள்ளனர். இந்த சூழலில் நேற்று அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு ஆதரவாக கர்நிசேனா என்ற அமைப்பினரும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது பாஜகவுக்கு எதிராக 400 வேட்பாளர்களை ராஜ்புத் சமூகத்தினர் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு 'Operation ரூபாலா' என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே அங்கே வரும் 12ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. ராஜ்புத் சமூகத்தினரின் போரட்டத்தால், தற்போது பாஜக ஆளும் முக்கிய மாநிலங்களில், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக அரியானா மாநிலம் ஹிஸார் தொகுதியில் பாஜக சார்பில் ரஞ்சித் சிங் (Ranjit Singh Chautala), "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதிய கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று பேசியிருந்தார். இவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழவே, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!