Election 2024

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார், கண்காணிப்பு நிலைக்குழுவினர் என அனைவரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு இரயிலில் ரூ.4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்று தெரியவந்தது.

மேலும் இதில் சதீஷ் என்பவர் பாஜகவின் உறுப்பினராக உள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 6 பைகளில் ரூ.500 கட்டு நோட்டுகளுடன் பிடிபட்ட கும்பல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெல்லை பாஜக எம்.எல்.ஏ-வும், வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டேல் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செங்கல்பட்டு டிஇஓ கூறியதாவது, “சென்னையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று (06.04.2024) பறக்கும் படையினரால் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேல் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான தொகை குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தும். அதன்படி, பறிமுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறையினர் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.” என்றார்.

Also Read: “‘எரியுதுடி மாலா… ஃபேன போடு’ என்று கதறுகிறார்கள்...” - பாஜகவினரை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !