Election 2024

“நீங்க வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்ல; எங்க ஓட்டு உதயசூரியனுக்குத்தான்”: ஈரோட்டில் திமுக வெற்றி உறுதி!

ஈரோடு உழவர் சந்தையில் இன்று (31.3.2024) முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சியாகச் சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது வேட்பாளர் பிரகாஷ், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் வெற்றிக்காக ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் மகிழ்ச்சியோடு அவரை சந்தித்து கைகுலுக்கினர்.

முதலமைச்சரோடு செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள், நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறீர்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நீங்கள் எங்களுக்கு வழங்கும் 1,000 ரூபாய் எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. எங்களுக்கு பென்சன் வருவது போன்ற உணர்வைத் தருகிறது. இந்த உதவி செய்த தங்களை, இன்று நாங்கள் நேரில் காண்பது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எங்களிடம் வாக்கு கேட்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எல்லாம் முன்னதாகவே முடிவு செய்துவிட்டோம். எங்கள் ஓட்டு உதயசூரியனுக்குத்தான் என்று உறுதியுடன் கூறினர்.

ஒன்றியத்தில் இந்தியா கூட்டணிதான் ஆட்சிக்கு வரும். நீங்கள் சொல்பவர்தான் பிரதமர் ஆவார். அந்த ஆட்சியின் மூலம் எங்களுக்கு நீங்கள் உதவிகள் செய்ய வேண்டும் என்று கூறினர். நீங்கள் உங்கள் நலனை பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் நல்லா இருக்கணும் என்று கூட்டமாகச் சேர்ந்து கூறியது முதலமைச்சரின் முகத்தில் மகிழ்ச்சியை அளித்தது. கழகத் தலைவர் அவர்கள் அனைவரையும் கைகூப்பி வணங்கியபோது, பொதுமக்கள் அனைவரும் உதயசூரியனுக்கே எங்கள் வாக்கு என்று முழங்கினர்.

காய்கறிச் சந்தை வியாபரிகள் முதலமைச்சரைப் பார்த்து சந்தோஷம் அடைந்தனர். உங்கள் ஆட்சியில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம் என்றும் நீங்கள் நல்லா இருக்கணும் என்றும் கூறியது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவைத்தது.

காய்கறி கடை பகுதிக்கு அருகில் கூடியிருந்தவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு சால்வைகளும், பழங்களும் கொடுத்து மகிழ்ந்தனர். அங்கிருந்த இளைஞர்கள் நடுவே, சில கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அவர்கள் முதலமைச்சர் அவர்ளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கைகூப்பி, பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போல - தமிழ்ப்பு தல்வன் திட்டத்தில் எங்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்துள்ள தங்களுக்கு எங்கள் நன்றி என்று கூறிய காட்சி முதலமைச்சர் அவர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நீங்கள் எல்லாம் உங்கள் பெற்றோரிடம் கூறி உதயசூரியனுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்று கூறினார்.

நிச்சயமாக நாங்களும், எங்கள் குடும்பமும் உதயசூரியனுக்கு வாக்களிப்போம் என்றும், பல ஆண்டுகளாக ஈரோட்டில் தி.மு.க. தேர்தலில் நிற்கவில்லை என்றும் தி.மு.க. ஆதரவு வேட்பாளருக்கு இதுவரை வாக்களித்தோம் என்றும் இந்த முறை தி.மு.கழக வேட்பாளரே நிறுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு உதயசூரியனில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் என்றும், இப்போதே ஈரோட்டில் தி.மு.க வெற்றி என்று கூறலாம் என்றும் அந்த இளைஞர்கள் கூறினார்கள்.

பெரியார் பிறந்த இடம் ஈரோடு, பேரறிஞர் அண்ணா, பெரியார் அவர்களது இல்லத்தில் தங்கி அவர்களோடு இயக்கம் வளர்த்த இடம் ஈரோடு. முத்தமிழறிஞர் கலைஞர் தந்தை பெரியார் அவர்களுடன் தங்கி குடியரசு இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து பாராட்டுகள் பெற்ற இடம் இந்த ஈரோடு. முப்பெரும் தலைவர்களும் கூடியிருந்து கழகக் கொள்கைகளை வளர்த்த மண் ஈரோடு. இந்த ஈரோட்டில் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பெண்களும் ஆண்களுமாக கூறினர்.

காய்கறி வியாபரிகளும்,பெண்களும், பொதுமக்களும் இளைஞர்களும் திரண்டு முதலமைச்சர் அவர்களிடம் கூறிய வார்த்தைகள் ஈரோட்டில் கழக வேட்பாளர் பெற்றி பெற்றுவிட்டார் என்பதையே காட்டுகிறது. இந்நிகழ்வின்போது ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் திரு.பிரகாஷ், அமைச்சர் திரு.சு.முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தி.மு.கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Also Read: ”பா.ஜ.கவில் 261 ரவுடிகள்” : பட்டியல் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!