DMK

“அதிமுகவுக்கு வக்காளத்து வாங்கியதற்காக பாவமன்னிப்பு கேட்கிறேன்; எடப்பாடிக்கு தகுதி இல்லை” -கோவை செல்வராஜ்

தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஓ.பி.எஸ் தலைமையில் ஓரணியும், இ.பி.எஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளருமான கோவை செல்வராஜ், தான் அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள முனைப்பு காட்டி வந்த இவர், இன்று திமுகவில் தன்னை இணைத்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ், இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார். உடன் அமைச்சர் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு இருந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், தான் திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "1971-ம் ஆண்டு எனது 14 வயதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து செயல்பட்ட நான், இவ்வளவு நாள் கழித்து தாய் கழகத்திற்கு இணைந்து செய்லபட வாய்ப்பு தந்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2017 பிப்ரவரி மாதத்தில் இருந்து 2021 வரை சுமார் 4 அரை ஆண்டு காலமாக, ஒரு சுனாமி வந்து நாட்டில் அழிவை ஏற்படுத்தியது போல், எடப்பாடி தலைமையில் தமிழ்நாட்டில் சீரழிவு ஏற்பட்டது. அந்த சீரழிவை, இந்த ஒன்றரை ஆண்டுகாலமாக சீரமைத்து மக்கள் மனதை புரிந்து ஏழை எளியவர்களுக்காக மக்களாட்சி நடத்தும் முதலமைச்சர் தலைமையில் இன்று நாங்கள் செய்லபட வந்துள்ளோம்.

நான் நான்கரை ஆண்டுகாலமாக அவர்களுக்கு (அதிமுக) வக்காளத்து வாங்கியதற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காரணம் இன்றைய ஆட்சியில் இலவச பேருந்து வசதியால் குறிப்பாக பெண்கள், தாய்மார்கள் - தினசரி தங்கள் பேரனை பார்ப்பதற்கு, தாய் வீட்டுக்கு, கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மாதந்தோறும் 1500 வரை சேமிக்க முடிகிறது. அப்படி பட்ட பெண்களின் ஆதரவு முதலமைச்சருக்கு இருக்கிறது.

இப்போதெல்லாம், தமிழ்நாடு முழுவதும் வியாபாரியை பாதிக்காத வண்ணம், எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடிகிறது.

மின்சாரம் தட்டபாடு இல்லாமல் சீராக வருகிறது. 100 யூனிட் மின்சாரம் நிறுத்தப்படுவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் எப்போதும் அது போன்று நடக்காது.

கடந்த அதிமுக ஆட்சியில் தங்கமணி மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்போது வெறும் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்துள்ளது திமுக அரசு.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படுவது மூலம் சுமார் 16 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். காலில் விழுந்து கொல்லைப்புறம் வழியாக வந்து ஆட்சி நடத்திய எடப்பாடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேச தகுதி கிடையாது. அதிமுக என்ற கட்சி இப்போது கம்பெனி ஆகிவிட்டது.

எனவே உண்மையாக அதிமுக தொண்டர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று திராவிட பாரம்பரியம் எப்போதும் தமிழ்நாட்டில் செயல்படுவதற்காக, சாதி, மதவாத கட்சியை வேரோடு அழிக்க நாங்கள் திமுகவில் இருந்துசெயல்படுவோம். விரைவில் எங்களுடன் சேர்ந்து 5000 பேர் கோவை அதிமுக தொண்டர்கள் இணையவுள்ளார்கள்.

கோவை என்றால் திமுக கோட்டை என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி நிரூபித்து கொண்டிருக்கிறார்; அவருடன் சேர்ந்து நாங்களும் செய்லபடுவோம்" என்றார்.

Also Read: “என்கிட்டயே பணம் கேக்குறியா” : மதுபான பாரில் சைடிஸ் வாங்கியதற்கு பணம் கேட்ட ஊழியரை தாக்கிய பாஜக நிர்வாகி!