DMK

வங்கிகளை தனியார்மயமாக்குவது ஜனநாயக விரோதம்... வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க முழு ஆதரவு!

"பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் செயலைக் கண்டித்து 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய நாட்களில் வங்கி ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவினை வழங்குகிறது” என தி.மு.கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயலைக் கண்டித்து 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செய்யும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் நியாயங்களை, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்து எடுத்துக்கூறியதைக் கருத்தில்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை வழங்குகிறது.

கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் - பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை. உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட ஒன்றிய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.

நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவினையும் - அதுதொடர்பாக அவசர அவசரமாகக் கொண்டுவரும் வங்கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து 9 லட்சம் வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் எம்.பி.. கூட்டம்கூட்டமாக கழகத்தில் இணையும் மாற்றுக்கட்சியினர்!