DMK

தி.மு.க தலைவரின் புகழாரத்தால் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன்!

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பின்னர் பேசிய தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், “தி.மு.க-வுக்கு முன்னால் இமையமே தூசாகத்தான் தெரியும் எனக்கு. நான் மட்டுமல்ல; எனக்குப் பின்னால் என் குடும்பமும் உங்களுக்கு நன்றி கொண்டதாக இருக்கும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதி அளிக்கிறேன். கலைஞரிடத்திலே இருந்தது போன்று, என் வாழ்நாள் முழுதும் உங்களிடத்திலே இருப்பேன். இது உறுதி! இது சத்தியம்” என உரையாற்றினார்.

பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

9 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் சட்டப்பேரவையின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர். இடி-மின்னல்-மழை என்கிற வகையில் சுப்பு-துரைமுருகன்-ரகுமான் கான் ஆகியோர் மேடைகளில் பங்காற்றினர். மின்னலாக ஜொலித்தவர் பொதுச் செயலாளர் துரைமுருகன்” எனப் புகழுரையாற்றினார்.

தி.மு.க தலைவர் தன்னைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிமிகுதியில் கண் கலங்கினார். இதனால் மற்ற நிர்வாகிகளும் நெகிழ்ந்து கலங்கினர்.

Also Read: “தி.மு.க தலைவரிடம் உறுதியளிக்கிறேன்...” - பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிகர பேச்சு!