DMK

"மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு தடை பெற்றார் எடப்பாடி பழனிசாமி” - ஜெ.அன்பழகன் பேச்சு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை வடபழனி ராசாங்கம் மத்திய வீதி பகுதியில் 2067 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் கலந்துகொண்டு 2067 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பேசுகையில், “தி.மு.கவை பொறுத்தவரை ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கமுடியும். ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க ஒருபோதும் அப்படி செய்வதில்லை.

தி.மு.கவில் உள்ளவர்கள் மீது ஆளும் தரப்பு பொய் வழக்குகள் பலவற்றைப் போட்டாலும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் உண்மையை நிரூபித்து பொய் வழக்குகளைத் தகர்த்து எறிந்து விடுகிறார்கள்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை காவல்துறை என அனைத்துத் துறைகளையும் தன் வசம் வைத்துள்ளார். அதற்குக் காரணம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கமே.

இதுதொடர்பாக தி.மு.க வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க சி.பி.ஐக்கு அனுமதி அளித்தார். ஆனாலும் எடப்பாடி தான் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தினால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தக்கூடாது என தடை வாங்கி வைத்துள்ளார்.

வருகின்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல்களுக்கும் விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வரும்” என்று தெரிவித்தார்.

Also Read: “தவழ்ந்த அடிமையும், தர்மயுத்தம் செய்த அடிமையும்” - பங்கமாக கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!