DMK
23 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூரில் நேரடி வெற்றி - தி.மு.க.,வின் கோட்டையான வேலூரை கைப்பற்றிய கதிர் ஆனந்த் !
17வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக ஏப்.,11 முதல் மே 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் மே மாதம் 23ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. 23 எம்.பிக்களுடன் தேசிய அளவில் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது தி.மு.க.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் கடந்த ஆக.,5ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்துள்ளது.
இதில் தி.மு.க வேட்பாளராக களம் கண்ட கதிர் ஆனந்த், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
1996ம் ஆண்டு 11வது மக்களவைக்கான தேர்தல் நடத்தப்பட்ட போது வேலூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி. சண்முகம் வெற்றி பெற்று எம்.பியாக நாடாளுமன்றம் சென்றார். அதுவே வேலூர் தொகுதியில் கடைசியாக தி.மு.க பெற்ற நேரடி வெற்றி.
அதன் பிறகு 14 மற்றும் 15வது மக்களவைத் தேர்தல்களின் போது, தி.மு.க. கூட்டணியில் இருந்த இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் காதர் மொய்தீன் மற்றும் அப்துல் ரஹ்மான் வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் வேலூர் மக்களவைத் தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிக் கனியை சுவைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் மக்களவையில் தி.மு.கவின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து தேர்தல் நடந்த 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று, மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!