DMK

நாட்டிலேயே நம்பர் 1 : மக்களவைத் தேர்தல் வெற்றியில் தி.மு.க-வின் மகத்தான சாதனை!

2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 341 வெற்றியாளர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்களைக் கட்சி ரீதியாக ஆய்வு செய்ததில் தி.மு.க 82.61% பெற்று முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற தி.மு.க உறுப்பினர்களில் 19 பேர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். நாடு முழுவதும் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பா.ஜ.க 73.93% பெற்று அடுத்த இடத்திலேயே இருக்கிறது.

வெற்றிபெற்ற பா.ஜ.க எம்.பி-களில் 224 பேர் 50% த்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வென்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற 52 பேரில் 18 சதவிகிதம் பேர் மட்டுமே 50% த்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றுள்ளனர்.

475 கோடீஸ்வர வெற்றியாளர்களில் 54 பேர் மட்டுமே கோடீஸ்வரர் அல்லாத போட்டியாளர்களை வென்றுள்ளனர். அதேபோல, 48 கோடீஸ்வரர் அல்லாத வேட்பாளர்கள் கோடீஸ்வர போட்டியாளர்களை வென்றுள்ளனர். அவர்களில் 21 பேர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றுள்ளனர்.

நாட்டிலுள்ள கட்சிகளிலேயே அதிகபட்சமாக 50% வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றதில் தி.மு.க 83% பெற்று முதலிடம் வகிக்கிறது. தி.மு.க பெருவாரியான வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த திட்டங்களின்படி தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாகப் பணியாற்றியதே காரணம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.