DMK

''இவ்வளவு நாள் என்ன தூங்குனீங்களா?'' - அரசு மீது தயாநிதி மாறன் காட்டம்

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் தி.மு.க மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அ.தி.மு.க அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். உடன் வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ரங்கநாதன், மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கூட அ.தி.மு.க.வினர் 8 ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மக்களுக்கு கொடுக்க தண்ணீர் இல்லாதபோது மது ஆலைகளுக்கு மட்டும் எப்படி தண்ணீர் கொடுக்க முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

”தமிழகத்தில் இத்தனை நாளாக தண்ணீர் பஞ்சம் இருப்பது அ.தி.மு.க.வுக்கு தெரியவில்லையா? தீடிரென தூங்கி எழுந்து மழை பெய்யவில்லை என நேற்று கூறுகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என முதலமைச்சர் கூறுகிறார். பற்றாக்குறை இல்லை என என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறுகிறார். எனவே எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.