Cinema

‘அன்னபூரணி’ படம் நீக்கம் : “திரைத்துறைக்கே நல்லது கிடையாது..” - ஆதரவு தெரிவிக்கும் இயக்குநர் வெற்றிமாறன்!

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் ‘அன்னபூரணி’. நயன்தாரா, ஜெய், பூர்ணிமா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த சூழலில் இந்த படத்தின் ட்ரைய்லர் வெளியான போதே சில சர்ச்சைகளுக்கு உள்ளானது. ஏனெனில் இதில் நயன்தாரா ஒரு பிராமண வீட்டு பெண்ணாக இருக்கும் நிலையில், அவர் அசைவ உணவுகளை சமைப்பது எப்படி? என்று படிப்பது போன்று இடம்பெற்றிருந்தது. அப்போதே சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதனை படக்குழு பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

தொடர்ந்து திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இந்த படமானது கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

அதாவது, பிராமண வீட்டு பெண்ணாக இருக்கும் நயன், தான் ஒரு மிகப்பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற இலட்சியத்தோடு இருக்கிறார். ஆனால் சமையல் கலைஞராக வேண்டுமென்றால், அசைவ உணவுகளை சமைக்க வேண்டும் என்பதால், இவரது குடும்பத்தினர் இதற்கு மறுக்கின்றனர்.

ஆனால் இவரது இஸ்லாமிய நண்பரான ஜெய் உதவியோடு, சமையல் சொல்லிக்கொடுக்கும் கல்லூரியில் சேர்ந்து குடும்பத்தாருக்கு தெரியாமல் படிக்கும்போது தந்தையிடம் சிக்கிக்கொள்ளும் நயன், தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்திலிருந்து சொல்லாமல் சென்னைக்கு சென்று விடுவார். பிறகு அங்கே பல்வேறு இன்னல்களை சந்திக்கும் இவர், எப்படி ஒரு நல்ல சமையல் கலைஞராக மாறினார் என்பதே மீதி கதை..

இதனிடையே இராமர் வனவாசம் சென்றபோது கறி சாப்பிட்டதாக இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜெய், நயன்தாராவிடம் கூறும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. மேலும் இறுதியில் நயன் பிரியாணி சமைக்கும் முன் நமாஸ் செய்யும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகளுக்கு இந்துத்வ அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அன்னபூரணி படத்தை ஒடிடி தளத்தில் இருந்து நீக்குவதாக Netflix நிறுவனம் அதிரடியாக அறிவித்து நீக்கியது. மேலும் சர்ச்சைக்குரிய சீன்களை எடிட் செய்த பிறகே மீண்டும் ஓடிடி தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அறிவித்த நிலையில், ஜீ நிறுவனமும் மன்னிப்பு கேட்டது.

ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்ட நிலையில், இது பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் Netflix-க்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, “Censor (தணிக்கை) செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு (CBFC) அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது.

ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று கூறியுள்ளார்.

Also Read: ”மனித உரிமைப் போராட்டத்தை பேசும் கேப்டன் மில்லர்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!