Cinema

நடிகர் அமிதாப் பச்சனுக்கு லிஃப்ட் கொடுத்த நபருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பு: என்ன காரணம்?

இந்திய சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1970களில் இருந்து நடித்து வருகிறார். பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக தளத்திலும் செயல்பட்டு வருகிறார்.

இவர் மூன்று முறை தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ, பத்ம பூசண் விருது வாங்கி கவுரவித்துள்ளது. அமிதாப் பச்சன் சினிமா மீது கொண்ட காதலால் 80 வயதிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மும்மையில் நடந்து படப்பிடிப்பிற்காக அமிதாப் பச்சன் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் நேரத்திற்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பிறகு அவரை ஒருவர் இருசக்கர வாகனத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அமிதாப் பச்சன் ட்விட்டரில் அந்த நபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இருப்பினும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர் என சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்தனர். அதோடு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையடுத்து மும்மை போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அமிதாப் பச்சனை அழைத்துச் சென்ற நபருக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். இதுபோன்று அண்மையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவை அழைத்துச் சென்ற நபருக்கு ரூ.10,500 விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அபராதத் தொகை ரசீதுக்கான நகல்களையும் மும்மை போலிஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Also Read: “இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !