Cinema

நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி.. அவரது சகோதரி கூறுவது என்ன ?

தமிழில் 90-களில் பிரபல நடிகராக இருந்தவர் தான் சரத் பாபு. ஆந்தியாவை சேர்ந்த இவர், 1973-ல் வெளியான 'இராம இராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து 1977-ல் 'பட்டின பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவே நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிருள்ளவரை என படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக ரஜினியுடன் முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், முத்து, வேலைக்காரன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினியும் இவரும் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர் ரஜினியுடன் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் அண்ணாமலை, முத்து போன்ற படங்கள் இன்றளவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துணை நடிகராக, கதாநாயகனாக, நண்பனாக, வில்லனாக என நடித்து வந்த இவர், வயது மூப்பின் காரணமாக 2000 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஏனைய படங்களில் தந்தையாக, துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கில்தான் நடித்துள்ளார்.

பாபி சிம்ஹா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான 'வசந்த முல்லை' படத்தில் நடித்துள்ளார். தற்போது 71 வயதாகும் இவர் நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில் அவ்வப்போது சிறு சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமானதால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செப்சிஸ் (Sepsis) என்ற நோயால் அவரது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாககவும் தகவல் வெளியாகியுள்ளது. சரத் பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான செய்தியை பரப்பினர்.

நேற்று இயக்குநரும் பிரபல நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த செய்தி தவறானது என்று சரத்பாபுவின் சகோதரர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது சகோதரி வெளியிட்டுள்ள பதிவில், "எனது சகோதரர் சரத்பாபு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் படிப்படியாக முன்னேறி வருகிறது. அவர் வேறு ஓர் அறைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். விரைவில் அவர் முழுமையாகக் குணமாகி ஊடகங்கள் முன் பேசுவார். ஆகையால், தயவு செய்து அவரைப் பற்றிய பொய்யான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: விறுவிறுப்பான காட்சி.. திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை.. விக்ரமுக்கு என்னாச்சு ?