Cinema

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட மலையாள இயக்குநர்.. முதல் படத்தை திரையில் பார்க்காமலே உயிர் பிரிந்த சோகம்!

மலையாளத்தில் புது முக இயக்குநராக இருப்பவர்தான் ஜோசப் மனு ஜேம்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஐ ஆம் கியூரியஸ்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமானார். அதன்பிறகு படிப்பில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வந்த இவருக்கு திரைத்துறையில் இயக்குநராக சாதனை படைக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார்.

இதற்காக மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதோடு முன்னணி இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அங்கு தனக்கு தேவையானவையை கற்றுக்கொண்டு சொந்த கதை ஒன்றை உருவாக்கினார். அதன்படி மலையாளத்தில் 'நான்சி ராணி' என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் அஜு வர்கீஸ், அஹானா கிருஷ்ணா, லீனா, சன்னி வேய்ன், லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வந்த நிலையில், அது முடிந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இதில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே இயக்குநர் ஜோசப்புக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால் அவர் எர்ணாகுளம் அலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே இவரை சோதனை செய்தபோது, நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 23-ம் தேதி உயிரிழந்தார். 31 வயதாகும் இவர் அவரது மனைவி மற்றும் உடன் பிறந்தவர்களுடன் வாழ்ந்து வந்தார்.

இளம் வயதில் உயிரிழந்துள்ள இயக்குநர் மறைவையடுத்து, நான்சி ராணி படத்தில் நடித்த நடிகர் அஜூ வர்கீஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் "சீக்கிரம் போய்ட்டீங்க சொகத்தரரே.." என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மறைவு அந்த படக்குழுவினரையும், மலையாள திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. தான் முதன்முதலாக இயக்கிய படத்தை திரையில் பார்க்காமலே நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ள இயக்குநர் ஜோசப் மறைவுக்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்து வருவது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: “எல்லா கொலைகளுக்கு பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்..” - ‘கண்ணை நம்பாதே’ ட்ரைலர் எப்படி இருக்கு ?