Cinema

“தயவு செய்து UPDATE கேக்காதீங்க.. அழுத்தமாக இருக்கு..” - ரசிகர்களிடம் கெஞ்சிய ஜூனியர் NTR !

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் ஜூனியர் NTR. 1991-ல் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் ஏராளம். அதனாலே இவர் என்ன படம் நடித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிடும்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், ஒரு பின்னணி பாடகராகவும் தனது படத்தின் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான RRR படத்தின் மூலம் உலக அளவில் அறியப்பட்டுள்ளார். பான் இந்தியா படமாக உருவான RRR படம், இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்த படமாக திகழ்ந்தது.

மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் உலக சினிமாவிலும் இவர் பிரபலமானார். படத்தில் அப்பாவி போல் வரும் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருப்பதாக விமர்சகர்கள் கருத்தும் தெரிவித்தனர். இந்த நிலையில் இவர் தனது 30-வது படத்தை இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டே போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ஆனால் அதுகுறித்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் தங்கள் அப்டேட்களை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். வழக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் கேட்டு வருவது உண்டு. தமிழில் கூட அஜித்தின் 'வலிமை' படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் செய்த செயல்கள் ஏராளம்.

கிரிக்கெட் மைதானம், வாகனங்களில் போஸ்டர், இணையத்தில் வைரல் என பல விஷயங்களை செய்து படக்குழுவை திக்குமுக்காட செய்தனர். இருப்பினும் அவர்கள் அப்டேட்களை வெளியிடவில்லை. இப்படியே ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்கள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது திரை கலைஞர்களை பாதிக்கிறது. இதனைத்தான் ஜூனியர் நடிகர் என்.டி.ஆர்., கூறியுள்ளார்.

தெலுங்கு பட விழா ஒன்றில் ஜூனியர் என்டிஆர் கலந்துகொண்டார். அவர் பேசிய அவர், "ஒரு படம் தொடங்கியதும் அப்டேட் கேட்காதீர்கள். தினம் தினம் ஒரு படத்துக்கு அப்டேட் தருவது சாத்தியம் கிடையாது. அப்டேட் கேட்டு ட்ரோல் செய்வதால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சம்பந்தப்பட்ட ஹீரோவுக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

அப்படி அப்டேட் கொடுத்தால், அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் ட்ரோல் செய்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு அழுத்தம் தருகிறது. ஒரு படத்தை பற்றிய தகவலை நாங்கள் எங்கள் மனைவிகளிடம் கூட ஷேர் செய்வதில்லை. முதலாவதாக உங்களிடம் (ரசிகர்களிடம்) தான் சொல்கிறோம். அதனால் பொறுமையை கடைபிடியுங்கள்." என்று தனது அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தொடர் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு ஜூனியர் என் .டி.ஆர் அறிவுரை கூறியுள்ளார்.

முன்னதாக ஜூனியர் என்.டி.ஆரை வைத்து கொரட்டல சிவா பிருந்தாவனம், ஊசரவெள்ளி, ஜனதா காரேஜ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முழங்காலில் கட்டு.. அருண் விஜய்க்கு ஆயுர்வேத சிகிச்சையா..! - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !