Cinema

KGF பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் பிரபலம்.. ‘நடிக்கவில்லை’ என்ற பிறகும் பேச்சு வார்த்தை !

கன்னடத்தில் பிரபலமான முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் பிரசாந்த் நீல். 2014-ல் வெளியான உக்ரம் என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு வெளியான KGF படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படம் மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில், இந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குநராக ஆனார்.

அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு 2022-ம் ஆண்டு KGF 2 திரைப்படம் வெளியானது. பான் இந்தியா படமாக உருவான இப்படம், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் மிகப்பெரிய பெயர் வாங்கியது. கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் பட்டியலில் சிறந்த திரைப்படமாக KGF 2 தான் இருந்தது. மேலும் இப்படத்தின் வசூல் டாப் 5-ல் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது பிரசாந்த் நீல், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்டோரை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து இவர், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பெயரிடப்படாத 'NTR31' என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க நடிகர் கமல்ஹாசனை முயற்சிகள் நடைபெற்று வந்ததாகவும், ஆனால் கமல் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கானை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம், தான் நடிப்பில் இருந்து சற்று ஓய்வு எடுக்க இருப்பதாக நடிகர் ஆமீர் கான் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று பேசிய அவர், இதனால் கொஞ்ச காலத்திற்கு நடிப்பை விட்டு விலகி இருக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வைகுண்ட ஏகாதசி: புகைப்படம் எடுக்கும்போது உயிரிழந்த போட்டோகிராபர்.. - 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!