Cinema

"மன்னிப்புக் கேட்கிறேன்.. ஆனால் 'Kashmir Files' பற்றி கூறிய கருத்து மறுக்க முடியாத உண்மை" -நடாவ் லாபிட்!

கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன.

அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர்.

மேலும் மத கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்களால் பாராட்டப்பட்ட இந்தப்படம் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார்.

அப்போது நிறைவுப் போட்டியில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது.

விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” எனத் தெருவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரின் இந்தக் கருத்துக்கு அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, நடிகர்கள் அனுபம் கெர், பல்லவி ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு காட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென்னும், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்டக் கருத்து என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த பெரும் சர்ச்சை குறித்து தனியார் சேனலுக்கு பேட்டியளித்த நடால், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களையோ, அவர்களது உறவினர்களையோ அவமதிக்கும் நோக்கில் நான் அப்படி சொல்லவில்லை. அப்படி உங்களை காயப்படுத்தியதாக நினைத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்.

ஆனால், நான் படம் பற்றி கூறிய கருத்து அனைத்தும் முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. இது நடுவர் குழுவின் உறுப்பினர்களுக்கும் தெரியும். இது போன்ற கௌரவமான திரைப்பட விழாவில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' போல் பிரச்சாரப் படத்தை திரையிட்டது தேவையில்லாதது. துயரத்தை அனுபவித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அங்கு பாதிக்கப்படுபவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனது கருத்துக்கள் திரைப்படத்தைப் பற்றி மட்டுமே இருந்ததே தவிர, அவர்கள் பற்றியது அல்ல.

நான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தனிப்பட்ட கருத்து அல்ல. வன்முறை மற்றும் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி, சமூகத்தில் விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தியை இந்தப் படம் கடத்துவதாக இருந்ததாக நடுவர் குழு உறுப்பினர்கள் அனைவருமே கருதினோம்.

நான் திரைப்படத்தின் சாரம் பற்றிதான் பேசுகிறேன் என்பதை அவர் (இஸ்ரேல் தூதர் நவோர் கிலான்) முற்றிலும் அறிந்திருந்தாலும், காஷ்மீரில் நடந்த சோகத்தைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதற்காக அவர் என்னைக் குற்றம் சாட்டினார். இது முற்றிலும் முட்டாள்தனமானது. ஒரு திரைப்பட தயாரிப்பாளராக நான் திரைப்படத்தை மட்டுமே மதிப்பிடுகிறேன் என்று அவருக்குத் தெரியும்" என்றார்.

Also Read: “என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு !