Cinema

“கண்டிப்பாக ‘ஜெய் பீம் 2’ வரும்..” - கோவா திரைப்பட விழாவில் அசத்தில் Update கொடுத்த படக்குழு !

இருளர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராஜாக்கண்ணு என்பவருக்கு போலிஸாரால் நேர்ந்த உண்மையான கொடுமைகள் குறித்தும், அவரது மனைவிக்காக முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டது குறித்தும் பேசியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’.

டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வெளியான பிறகு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்ததோடு "இந்த படம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் அனைத்து மக்களிடமும் வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் பட்டியலிலும் இடம்பெற்றது. மேலும் ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்திலும் இப்படத்தின் ஒரு பகுதி திரையிடப்பட்டது.

இந்த படம் வெளியாகி சில சலசலப்பை ஏற்படுத்தினாலும், திரை ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவராலும் வெகுவாக கவரப்பட்டது. பான் இந்திய படமாக எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் '12-வது பெய்ஜிங் சர்வதேச திரைப்படவிழா' நடைபெற்ற போதும் ஜெய் பீம் திரையிடப்பட்டது. இதனை கண்ட சீன திரை ரசிகர்கள் இப்படத்தை காணும்போதே தேம்பி அழுதனர். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்ததோடு, இப்படத்தின் கதை மன வலியை ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் நடக்கும் இன்னல்களை எடுத்துரைப்பதாகவும், கண்ணீருடன் பார்த்து மனம் நெகிழ்ந்து போனதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அனைவர் மத்தியிலும் மிகவும் புகழ்பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார். கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்ட நிலையில், இயக்குநர் டி.ஜெ.ஞானவேல், ராஜசேகர் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கேள்விகளுக்கு பதிலளித்தனர். அந்த சமயத்தில் ஜெய் பீம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இதுபோல் அதிகமான வழக்குகளை தீர்த்து வைத்திருக்கிறார் என்றும், விரைவில் கட்டாயமாக 'ஜெய் பீம் 2' எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம் ஜெய் பீம் 2 படமாக எடுக்கப்படுமா அல்லது சீரிஸாக எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ஜெய் பீம் 2 விரைவில் எடுக்கப்பட்டு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’” : IFFI விழாவில் நடாவ் லாபிட் காட்டம்!