Cinema
வலி - பொசசிவ்னெஸ் - காதலுணர்வு: நிகழ்கால உதாரமாக இருக்கும் 1986ல் வெளிவந்த 'மவுனராகம்' !
மவுன ராகம் படத்தில் ஒரு காட்சி!
மோகன் தன் அறைக்குள் இசையை போட்டு தனியே அமர்ந்திருப்பார். ரேவதி வருவார். மோகனை அவமதித்தது எல்லாம் போய், இயல்பாக மாறுவதற்காக நிற்பார். மோகன் பொருட்படுத்தாமல் அமர்ந்திருப்பார். அவர் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஓடும் இசையை ரேவதி நிறுத்துவார். மோகன் ரேவதியை பார்ப்பார். எதுவும் பேசாமல் எழுந்து வந்து இசையை மீண்டும் போடுவார். தன் படுக்கைக்கு மீண்டும் செல்ல யத்தனிக்க, ரேவதி மறுபடியும் இசையை நிறுத்துவார். மோகன் ரேவதியை முறைத்தபடி வந்து இசையை போட்டுவிட்டு, திரும்புவார். ரேவதி மறுபடியும் இசையை நிறுத்துவார். மோகன் திரும்பி ரேவதியை கத்துவார். மோகன் அந்த படத்தில் ரேவதியை அப்போதுதான் கத்துகிறார்.
ரேவதி அதிர்ந்துபோய் பதிலுக்கு கோபத்துடன் பேசுவார். 'ஊருக்கு போகணும்" என்பார். மோகன் ஒரு சின்ன, மிக சின்ன தடுமாற்றத்தை அருமையாக காண்பித்திருப்பார். சட்டென தடுமாற்றத்தை கடந்து, தொலைபேசிக்கு வந்து, ட்ராவல்ஸுக்கு கால் செய்து உடனே டிக்கெட் போடுவார். தொலைபேசியை வைத்துவிட்டு படுக்கைக்கு போவார். ரேவதி கண் தளும்பும் நீருடன் மோகனை பார்த்து கொண்டிருப்பார்.
அந்த மொத்த காட்சியிலும் அழகான பூடகம் ஒன்று ஒளிந்திருக்கும். ரேவதி பேசுவது தன் உணர்வை புரிந்து கொள்ளாது காயத்தை உருவாக்க மட்டுமே விழையும் என்பதுதான் மோகனுடைய புரிதல். அதனால் அவர் ரேவதியை விட இசை தன் உணர்வை மதிக்கும் என்ற கட்டத்துக்கு வந்திருப்பார்.
இறந்து போன ஒருவனை எண்ணி, அவனுடன் வாழ முடியவில்லையே என ஏங்கி ரேவதி குமைகிறார். கூடவே இருந்துகொண்டிருக்கும் ஒருத்தியை எண்ணி அவளுடன் வாழ முடியவில்லையே என மோகன் குமைகிறார்.
மொத்த படத்திலும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எனக்கு தோன்றியது. தன் காதல் கதையை சொல்லும் ரேவதி, மோகனுக்கு ஒரு கடந்த கால காதல் வாழ்க்கை இருந்ததா என படத்தின் எந்த பகுதியிலும் கேட்கவே இல்லை. கார்த்திக், கூடாத காதல் என தன்னுடைய வலியை மட்டுமே அவள் சிந்திக்கிறாள். மோகன் தனக்கு வலி இருந்தாலும் அதை தாங்கிக்கொண்டு, ரேவதியின் வலியை உணருகிறான். அதற்காக விவாகரத்து கொடுக்கும் அளவுக்கும் போகிறான்.
தனியே அமர்ந்து இசை கேட்குமளவுக்கு ஒருவனுக்கு தனிமை இருக்குமென்றால், கடந்த கால காதல் இருந்திருக்கும்தானே. எனக்குத்தான் அப்படி தோன்றுகிறதா என தெரியவில்லை. ஒருவேளை அந்த மோகன் ப்ளாஷ்பேக்குடன் ஒரு கதை சொன்னால், மோகனுக்கு இருக்கும் வலி, பொசசிவ்னெஸ், காதலுணர்வு எல்லாம் ரேவதிக்கும் தோன்றுமா என தெரியவில்லை.
இந்த படம்தான் எத்தனை அழகு யோசிக்க யோசிக்க!
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!