Cinema

“இதயத் துடிப்பு சீராக இல்லை..” எப்படி இருக்கிறார் தீபிகா படுகோன் - படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன?

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘புரொஜெக்ட் கே’ (Project K) என்ற படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட இதயத்துடிப்பு அதிகரிப்பின் காரணமாக நடிகை தீபிகா படுகோன் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதற்றமடைந்த படக்குழுவினர் அவரை உடனே மீட்டு அருகிலிருந்த 'காமினேனி' மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எப்போதும் உடற்பயிற்சி, விளையாட்டு, டயட் என்று தன்னை ஃபிட்டாக வைத்து கொள்ளும் தீபிகா, திடீரென இவ்வாறு மயங்கி விழுந்தது ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் அவர் மயங்கி விழுந்ததையடுத்து அவரது உடல்நிலை குறித்துத் தவறான தகவல்கள் பரவத் தொடங்கின.

இதன் காரணமாக அவரது உடல் நிலை குறித்து தீபிகா படுகோன் தரப்பினர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதாவது "இது சாதாரண மயக்கம்தான், இதயத் துடிப்பு சீராக இல்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மற்றபடி அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்யவில்லை. சாதாரண செக் அப் மட்டுமே நடந்தது. அவரது உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று’ : நாடுமுழுவதும் காங்கிரசின் எழுச்சி கண்டு மிரண்டு போன பா.ஜ.க அரசு!