Cinema

“நான் டப்பிங் பேசாததற்குக் காரணம்...” - கர்ணன் படம் குறித்து மனம் திறந்த ‘ஏமராஜா’!

‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல்ல வெளியான படம் கர்ணன். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது.

மே 14ம் தேதி இந்தப் படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகி, இன்னும் நிறைய பார்வையாளர்களைச் போய்ச் சேர்ந்தது. இந்தப் படத்தில் லால், ஏமராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கூடவே அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பின்னணி குரலும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால், அந்தக் குரலை கதிரவன் என்ற டப்பிங் கலைஞர் கொடுத்திருந்தார். ஏன் நீங்கள் டப்பிங் பேசவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் லாலிடம் கேட்ட வண்ணம் இருந்தனர்.

இது பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் நடிகர் லால். "பலரும் ஏன் ஏமராஜா கதாபாத்திரத்திற்கு என் சொந்தக் குரலில் டப்பிங் பேசவில்லை எனக் கேட்கிறீர்கள். உங்கள் எல்லோருக்குமே தெரியும் இந்தக் கதைக்களம் திருநெல்வேலில் பகுதியில் நடப்பது. அது சென்னையில் பேசும் தமிழில் இருந்து மிகுந்த மாறுபாடுகளோடு இருந்தது. தனித்தன்மையோடு இருந்தது.

கர்ணன் படத்தில் மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. நான் பேசியது பயன்படுத்தப்பட்டிருந்தால், இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா எனத் தெரியவில்லை. எது எப்படி ஆயினும், உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

Also Read: ஜெய் நடித்த 'குற்றம் குற்றமே' திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸ்? : படக்குழு அதிரடி முடிவு!