Cinema

’என் சொத்துகளை அபகரித்து விட்டார் ஜெயஸ்ரீ ’ - மனைவி மீது குற்றம்சாட்டும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர்

தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ. இவரது கணவர் ஈஸ்வர், இவரும் தனியார் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், தனது கணவர் ஈஸ்வர் குடிபோதையில் தன்னை தாக்கியதாகவும், தனது பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகர் ஈஸ்வரை அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் ஈஸ்வர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயஸ்ரீ என் மீது அளித்த புகார்கள் உண்மையானது அல்ல என்றும் காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யாமல் தன்னை கைது செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ

மேலும் ஜெயஸ்ரீயை காட்டிலும் அவரின் குழந்தை மீது தான் அதிக அக்கறையுடன் இருப்பதாகவும் குழந்தையின் நலன் கருதியே பல நேரங்களில் இந்த விவகாரத்தைச் சுமூகமாக கையாண்டதாகவும் தெரிவித்தார்.

ஈஸ்வரின் தந்தை வருமானத்தில் வாங்கிய வீடு மற்றும் காரை ஜெயஸ்ரீ ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தன்னை பணத்திற்காக தொடர்ந்து ஜெயஸ்ரீ தொந்தரவு செய்வதாகவும் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.