Cinema

பிகில் படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்த திரையரங்கம்-தர்ணா செய்து கூடுதல் தொகையை திரும்பப் பெற்ற ரசிகர்கள்

அட்லி, விஜய் காம்போவில் மூன்றாவது படமாக உருவாகி ரிலீசாகியுள்ளது பிகில். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம்.

ரிலீசுக்கு முன்பிருந்தே பிகில் படம் ஏகப்பட்ட சிக்கல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளானது. இருப்பினும் திரைக்கு வந்ததும் இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கில் பிகில் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததால் கொதிப்படைந்த ரசிகர்கள் தியேட்டர் வாயில் முன்பே தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 130 ரூபாய் சேர்த்து 220 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ததால், தியேட்டர் ஊழியர்களிடம் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் கொடுத்ததும் தியேட்டருக்கு விரைந்த அவர்கள் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக வசூலித்த ரூ.130-ஐ திரும்ப பெற்றுத் தந்துள்ளனர். இதனால் அங்கு சில மணிநேரம் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிகில் பட ரிலீசின் போது சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.