Cinema

‘பிகில்’ : விரக்தியில் தியேட்டரை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இன்று வெளியானது.

‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.

தீபாவளி விடுமுறையையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்புக்காட்சி தொடங்கியது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் விஜய் ரசிகர்கள் தியேட்டரையே சூறையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கில் ‘பிகில்’ திரைப்படம் வெளியாவதையொட்டி, அதிகாலையிலேயே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை சேதப்படுத்தினர்.

தியேட்டர் ஊழியர்களைத் தாக்கிய ரசிகர்கள் தியேட்டருக்குள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்தினர். மேலும், க்ரில் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.