Cinema

‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழா விவகாரம் : விஜய்க்கு ஆதரவாக அரசை எச்சரித்த தமிழக காங்கிரஸ்!

நடிகர் விஜய்யின் பிகில் பட இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

அதில், பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்த நடிகர் விஜய், யாரை கைது செய்யவேண்டுமோ அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, பேனர் அடித்தவர்களையும், லாரி டிரைவரையும் கைது செய்வதா என ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைச் சாடியிருந்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், “அரசியல்ல புகுந்து விளையாடுங்க, ஆனால், விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க, யாரை எங்க உட்கார வெக்கணுமோ அங்க வையுங்க, திறமைய வச்சு முடிவு பண்ணுங்க” எனத் தெரிவித்திருந்தார்.

விஜய்யின் இந்த கருத்துக்கு ஆளும் அ.தி.மு.கவினர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில், பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்த யார் அனுமதி அளித்தது எனக் கேட்டு தாம்பரம் தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித்துறையை விட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் வட்டாரத்திலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிகில் பட விழாவின்போது விஜய் பேசிய சில கருத்துகள் ஆளுங்கட்சியினருக்கு எதிராகக் கூறப்பட்டதாக புரிந்துகொண்டு அ.தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதனாலேயே இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளித்தது யார் எனக் கேள்வி கேட்டு தனியார் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறையை ஏவியுள்ளது அ.தி.மு.க அரசு.

உண்மையில் கல்லூரிக்கு வெளியே உள்ள அரங்கத்தில்தான் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ஆகையால் இதிலிருந்து அ.தி.மு.கவின் அப்பட்டமான துஷ்பிரயோகம் வெளிப்பட்டுவிட்டது என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்லூரிக்கு விடுத்துள்ள நோட்டீஸை அதிமுக அரசு வாபஸ் பெறவேண்டும் என்றும், இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.