Cinema

இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகிறது ’அந்தாதூன்’ : கண் தெரியாத நாயகன் வேடத்தில் பிரசாந்த் !

பிறமொழிப் படங்களை ரீமேக் செய்யும் வரிசையில் ’அந்தாதூன்’ திரைப்படம் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தானா சேர்ந்த கூட்டம், பிங்க், அர்ஜூன் ரெட்டி என இந்தி, தெலுங்கு படங்கள் தமிழில் வெளிவந்திருக்கும் நிலையில், அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக பிரபல இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் அறிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதூன். இதில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் படமான இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். வெற்றி படமாக அமைந்த அந்தாதூத் படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, சீனாவிலும் அந்தாதூன் படம் வெளியிடப்பட்டு வசூலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில், அந்தாதூன் படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் ரீமேக் செய்யவிருப்பதாக இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய தியாகராஜன், அந்தாதூன் படத்தில் பியானோ மாஸ்டராக நடித்த ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவிருக்கிறார். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பயின்றதால் ஆயுஷ்மான் கதாபாத்திரத்துக்கு கைதேர்ந்தவராக பிரசாந்த் இருப்பார் என தெரிவித்தார்.

தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ள இந்த படத்துக்கான இயக்குநர், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்த தியாகராஜன், படக்குழு முடிவானதும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றார்.