
நேபாளத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கோர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு உண்டாகி, நேபாளத்தில் உள்ள போதேகோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
எதிர்பாராத இந்த வெள்ளப் பெருக்கு, பெரும் அச்சுறுத்தலுக்கு வித்திட்டுள்ளது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்கியுள்ளனர் என அந்நாட்டு சுற்றுலாத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
காணாமல் போன 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 105 பேர் இந்தியர்கள் என்றும், சுமார் 111 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றும் நேபாளம் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் எல்லைக் கடந்து பீகார் நோக்கி வருவதால், பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






