
உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி மையமாக, கத்தாரின் ராஸ் லப்பான் (Ras Laffan) தொழிற்பேட்டை நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை, ஈரான் போர் தாக்குதலால் சேதமடைந்ததால் இதன் உற்பத்திப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர், ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, மீண்டும் ஆலையில் பணிகள் தொடங்கின.
இந்நிலையில், இந்தத் தொழிற்சாலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பபித், சுஜித்குமார் மற்றும் கவின் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்தம் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






