
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் தொடர்ந்து மோசடி நடைபெற்று வருகிறது. மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 13 பேரை சிபிஐ கைது செய்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு பிரதமர் அலுவலக மேற்பார்வையில் மறுதேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், தேசிய தேர்வு முகமையால் இந்த முறையும் மோசடியைத் தடுக்க முடியவில்லை.பிகார் மாநிலம் லேக்கிசராய் தேர்வு மையத்தில், தேர்வை நடத்தும் தனியார் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்களின் துணையோடு ஆள்மாறாட்ட மோசடி நடந்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் 18 பேரைப் பிகார் போலீஸார் கைது செய்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரேர்னா குமார் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்குப் பதிலாகத் தேர்வு எழுதிய பாட்னா, டெல்லி, ஒடிசா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மற்றும் தேர்வு மையப் பணியாளர்கள் என இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடிக்கு ரூ.12 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.






