ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது.
நமது நாட்டின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் ஏவுகனைகளை இந்திய ராணுவம் எளிதாக முறியடித்தது. இதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தாக்குதல் தொடர்வதை கைவிட்டனர்.
ஆனால் இந்த தாக்குதல் நடவடிக்கையை நிறுத்துவதாக இந்தியா, பாகிஸ்தான் அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன்னால்தான் போர் நிறுத்தப்பட்டது என தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இது குறித்து இதுநாள் வரை பிரதமர் மோடியோ அல்லது ஒன்றிய அரசோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்நிலையில் G7 மாநாட்டிற்கு உரிய அழைப்பு கிடைக்காமலே ஒரு பார்வையாளர் போன்று அங்கு சென்று இருக்கிறார் பிரதமர் மோடி. இங்கு அமெரிக்க அதிபரை மோடி சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க அதிபரிடம் அரைமணி நேரம் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், இதே நேரம் பாகிஸ்தானி ராணுவத் தளபதி அசிம் முனிரை சந்திக்க அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு அவருடன் மதிய உணவும் உள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க மறுத்துவிட்டு, பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ளது இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனிர் பேசிய வெறுப்பு பேச்சுக்கு பிறகுதான் பஹல்காம் தாக்குதல் நடந்தது. அவருடன் இன்று மதியம் அமெரிக்க ஜனாதிபதி விருந்து உண்ணவிருக்கிறார். G7 மாநாட்டில் மோடியை சந்திக்காமல் பாதியிலேயே ட்ரம்ப் கிளம்பியதற்கு காரணம் இந்த விருந்துதான். இந்தியாவின் வெளியுறவு முற்றாக நொறுங்கி இருக்கிறது. பிரதமர் மோடியோ எதுவும் பேச மறுக்கிறார்” என விமர்சித்துள்ளார்.