தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். வடக்கு சுமத்ராவில் உள்ள பிஞாய் நகருக்கு 160 கிலோ மீட்டர் மேற்கே இந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.
இந்தோனேசியா ரிங்க் ஆஃப் ஃபயர் (Ring of Fire) எனப்படும் எரிமலை வளையம் பகுதியில் அமைந்துள்ளது. Ring of Fire என்ற பகுதியானது நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் போன்றவை அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பகுதியாகும். இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாகும். இந்த சூழலில் இங்கு மீண்டும் சுனாமி ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தோனேசியாவின் அண்டை நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில்தான் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்துதான் இந்த சுனாமி ஏற்பட்டது. அந்த சமயத்தில் 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.
எனவே சுமத்ரா தீவு பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.