உலகம்

அகதிகள் முகாம், குழந்தைகள் மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் : உலகநாடுகள் கண்டனம் !

காஸாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகள் முகாம், குழந்தைகள் மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் : உலகநாடுகள் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அகதிகள் முகாம், குழந்தைகள் மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் : உலகநாடுகள் கண்டனம் !

கடத்த சில நாட்களுக்கு வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியபோது அவர்களின் எதிரில் இஸ்ரேலிய பணயக் கைதிகள் மூன்று பேர் இருந்துள்ளனர். ஆனால் அவர்களை அச்சுறுத்தல் எனக் கருதி இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டு கொலை செய்தனர்.

இந்த நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஹமாஸ் போராளிகள் இருப்பதாக கூறி இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகிய நிலையில், இடிபாடுகளில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 28 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதே போல காஸாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்படை நேற்றுமுன்தினம் நடத்திய தாக்குதலிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories