அமெரிக்காவின் உட்டா கவுண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கேரி ஆலன் (வயது 26). இவர் அந்த பகுதியில் இருந்த காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு சிலந்தி இவரை தொந்தரவு செய்துள்ளது. இதனால் எரிச்சலான கேரி சிலந்தியை கொல்ல முடிவெடுத்துள்ளார்.
உடனே தன்னிடம் இருந்த லைட்டரை வைத்து சிலந்தியை எரித்து கொல்ல அதன் அருகில் நெருப்பு பற்ற வைத்துள்ளார். ஆனால் அப்போது அடித்த காற்று காரணமாக நெருப்பு உடனடியாக அந்த பகுதி முழுக்க பரவியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த லைட்டரை கேரி ஆலன், நெருப்பை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அது அவரால் முடியாமல் போகவே நெருப்பு வனம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் அது காட்டுதீயாகி நான்கு திசைக்கும் பரவியுள்ளது.
பின்னர் தீயணைப்பு துறையினர் கடும் முயற்சிக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இந்த தீயை கட்டுப்படுத்த பல கோடி ரூபாய் செலவாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் இந்த சம்பவத்துக்கு காரணமான கேரி ஆலன் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவரது பையில் கஞ்சா உள்ளிட்ட சில போதைப்பொருட்களும் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள தீயணைப்புத்துறை வீரர் ஒருவர், "தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. காற்று வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. விமானத்தின்மூலம் தண்ணீர் கொட்டப்பட்டதால் தீ எளிதாக கட்டுக்குள் வந்தது. ஒரு லைட்டர் கூட பல ஏக்கர் காட்டை நாசமாக்கும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.