இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான ஷஷிகாந்த் மமானே, அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளான ஸ்ருதி (9) மற்றும் ஸ்ரேயாஸ் (6) ஆகியோர் துபாயில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஓமன் நாட்டுக்கு சென்று அங்குள்ள சலா அல்-முக்சைல் கடற்கரையில் சென்று அலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று இந்த குடும்பத்தினரை் கடலுக்குள் இழுத்துச்சென்றுள்ளது.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்ற நிலையில், மொத்தம் 8 பேர் கடலின் உள் இழுத்துச் செல்லப்பட்டனர். அதில் 3 பேர் மீட்கபட்ட நிலையில் அவர்களுக்கு கடற்கரையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
காணாமல்போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்துவந்த நிலையில், அதில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதம் இருக்கும் 3 பேரை தேடும் பணியில் கடலோர காவல்படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூறியுள்ள போலிஸார், கடற்கரையின் விளிம்பில் நின்றுகொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த பெரிய அலை இவர்களை இழுத்துச்சென்றதாக கூறியுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து அந்த கடற்கரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.