உலகம்

முற்பிறவி என்பது உண்மையாக இருக்க முடியுமா? - முற்பிறவி என்கிற கருதுகோள் உருவானது எதற்காக?

மதங்களின் வழியாக நிறுவப்பட்ட முற்பிறவி கருத்துக்கு எதிரில் இருந்து அறிவியல் இத்தனை காலமும் வாதிட்டு வந்தது.

முற்பிறவி என்பது உண்மையாக இருக்க முடியுமா? - முற்பிறவி என்கிற கருதுகோள் உருவானது எதற்காக?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பிற உயிர்களிலிருந்து மனித உயிர் வேறுபட்டது. பிற உயிர்களுக்கு இயக்கவென இயற்கை தேவைப்படுகிறது. மனிதனை இயக்கவென சமூகம் தேவைப்படுகிறது. மனிதனை இயக்கும் சமூகம் தகவல்களால் கட்டப்பட்டது. பலவித தகவல்கள் சமூகத்தில் உண்டு. குடும்பம், அரசு, அறிவியல், மதம், ஆன்மீகம் என்கிற பலவகை கருத்துகள் சமூகம் தொன்றுதொட்டு புழங்கும் தகவல்களையே அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய தகவல்களை கையாள்வது எப்படி என தெரிந்து கொண்டதில்தான் பிற விலங்குகளிலிருந்து மனிதன் வேறுபடுகிறான்.

வேட்டைக்குச் செல்கையில் பிற விலங்குகளின் கால்தடம் தொடங்கி புதுச்சூழலில் இருக்கும் காலநிலை வரை எல்லாவற்றையும் அவன் புரிந்து கொண்டதற்கு அடிப்படை, தொன்றுதொட்டு அவன் சேமித்து வந்த தகவல்களே. அந்த தகவல்களின் சேகரிப்பைத்தான் பண்பாடு என்கிறோம். ஒவ்வொரு பண்பாட்டிலும் வாழ்க்கையை பற்றி பல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் பலவித நம்பிக்கைகளும் இருக்கின்றன. அந்த நம்பிக்கைகள் அந்தந்த பண்பாட்டுக்குரிய மக்கள் கூட்டம் உருவாகி வந்த சூழ்நிலைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பண்பாடு, இனம், மொழி என எல்லா வரையறைகளையும் கடந்து மொத்த மனித சமூகத்துக்கும் தேவைப்படும் தகவல் ஒன்றிருக்கிறது. மரணத்துக்குப் பின் என்ன நேரும் என்ற தகவல்!

முற்பிறவி மற்றும் மறுபிறவி போன்ற நம்பிக்கைகள் உலகின் பல சமூகங்களில் நிலவுகின்றன. மனித ஆன்மாவின் பயணத்தையே பிறவிகளாக விளக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதர் இறந்துவிட்டாலும் அவரின் ஆன்மா இறப்பதில்லை. அது அடுத்தடுத்த நபர்களுக்கு தலைமுறைகள் கடந்து பயணிக்கிறது என்கிறார்கள்.

மறுபிறப்பு பற்றிய நம்பிக்கைகளை கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் நிராகரிக்கின்றன. ஆனால் உலகின் பெரும்பாலான மக்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இருக்கிறது. இந்து மதம், புத்த மதம், யூத மதம் முதலிய பல்வேறு மதங்களிலும் மறுபிறப்பு செயல்பாடு இடம்பெற்றிருக்கிறது. பிறப்புக்கு முந்தைய, இறப்புக்கு பிந்தைய பயணமாக குறிப்பிடப்படுகிறது.

மறுபிறவி நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் இறந்துவிட்டால், அவரின் ஆன்மா இன்னொருவரின் உடலுக்கு செல்கிறது. நீங்கள் நல்லவராக இருந்திருந்தால், உங்களின் ஆன்மா நல்ல வாழ்க்கையை தேடி அடைந்து பிறப்பெடுக்கும். மோசமானவராக இருந்திருந்தால் ஒரு மோசமான வாழ்க்கையைக் கண்டு தண்டனையாக பிறப்பெடுக்கும்.

புத்த மதத்திலும் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருக்கிறது. புத்த மதத்தின் தலைவராக கருதப்படுகிற தலாய் லாமாவே மறுபிறப்பு எடுத்தவராகத்தான் கருதப்படுகிறார். புதிய தலாய் லாமாவை கண்டறிந்து அடையாளம் காட்டுபவரும் மறுபிறவி எடுத்தவராகத்தான் இருப்பார் என்கிறது புத்த மதம்.

மரணத்துக்குப் பின் என்ன நேரும் எனச் சொல்ல எவரும் இருந்ததில்லை. சொன்னவரை நம்புவதற்கான சாத்தியங்களும் இல்லை. ஆனால் அடிப்படையாக மரணத்துக்கு பின் நாம் ஒன்றும் இல்லாமல் போவதாக இருக்கும் உண்மையை மனிதன் ஏற்றுக்கொள்வதில்லை. ஏதோவொரு வகையில் தான் மீண்டும் உயிர் பெற வேண்டும் என அவன் விரும்புகிறான். அதற்கு வெவ்வேறு வழிகளை நாடுகிறான். இலக்கியம், வரலாறு, புகழ் என அவன் தேடும் வழிகளில் ஒன்றுதான் மதம். அந்த மதம் என்கிற அமைப்பு இருவகை வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பக்கம் தனி நபரின் ஆன்ம தேடலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் துணைபுரியும் வேலையைச் செய்யும் மதம் மறுபக்கத்தில் மக்களை அரசுகள் எந்தத் தடையுமின்றி ஆளுவதற்கான வாய்ப்பை கொடுக்கவும் பயன்படுகிறது. அன்றாடம் தன்னுடைய வாழ்க்கையை வாழ ஓடும் மனிதன் தோற்று துவண்டு அலுப்படைகையில் அவனது கோபம் அரசின் பக்கம் திரும்பாமல் வேறு ஒரு பக்கம் திருப்பப்பட வேண்டிய தேவை இருந்தது. முற்பிறவி என்கிற கருத்து உருவாக்கப்பட்டது.

ஆண்டாண்டு காலமாக வரலாறாகவும் தனிக்கதைகளாகவும் குடும்பக் கதைகளாகவும் குவிந்து கிடக்கும் தகவல்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதச் சமூகத்துக்கு மதம் என்கிற அரசின் கருவியின் வழியாக முற்பிறவி என்கிற கருதுகோள் ஆழமாக நடப்பட்டது.

பல விஷயங்கள் எளிமையாயின.

வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டால் எவரும் அரசை குறை சொல்ல வேண்டியிருக்கவில்லை. முற்பிறவியில் செய்ததன் விளைவு என தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டார்கள். எவரும் தேர்ந்தெடுக்காமல் ஓர் அரசனோ மதத் தலைவனோ நியமிக்கப்பட்டாலும் கேள்வி கேட்க எவரும் இல்லை. முற்பிறவியின் பயனாக அவருக்கு அந்தப் பதவி கிடைத்ததாக நம்ப வைக்கப்பட்டார்கள்.

தங்களின் அந்தரங்க ஆசைகளும் சொல்லொண்ணா துயர்களும் தொடங்கப்படாத அடுத்த பிறவியில் சரியாகி விடும் என நம்பி வாழ்க்கை ஓட்டப்படும் சமூகம் ஒன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. அச்சமூக நம்பிக்கையின் அடிப்படையாக முற்பிறவி நம்பிக்கை இருந்தது.

பிறகு 18ஆம் நூற்றாண்டில் நேர்ந்த மறுமலர்ச்சி, அறிவொளி காலம் முதலியவற்றின்போது மதங்களின் மூடத்தனம் வெளுக்கப்பட்டது. மத பீடங்கள் நொறுக்கப்பட்டன. மதத்தில் அதிகாரம் குறைக்கப்பட்டது. அரசர்களின் காலம் முடிவுக்கு வந்தது. ஜனநாயக அரச வடிவங்கள் உருவாகி உலக நாடுகளில் அரசாண்டன.

மதங்களின் வழியாக நிறுவப்பட்ட முற்பிறவி கருத்துக்கு எதிரில் இருந்து அறிவியல் இத்தனை காலமும் வாதிட்டு வந்தது. ஆனால் சமீப காலத்தில் முற்பிறவி சாத்தியம் என்பதற்கான விளக்கங்கள் அறிவியலின் பக்கத்திலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அறிவியல் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் அறிவியலின் மோசமான பக்கங்களுடன் கைகோர்த்து தம்மை அவை நிரூபித்துக் கொள்ள முயலுகின்றன.

மறுபிறவி நம்பிக்கைக்கான நிரூபணத்தை அறிவியல் தர முடியாது. ஏனெனில் அறிவியல் உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளும்.

banner

Related Stories

Related Stories