ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இத்தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உட்பிரிவு என சொல்லப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 5 நாட்களிலேயே கடற்படை அதிகாரி, மனைவி கண்முன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தனது மனைவியுடன் வினய் நர்வாலு காஷ்மீருக்கு சுற்றுலாவந்துள்ளார். அப்போதுதான் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி கண்முன்னே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, வினய் நர்வாலு குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது சகோதரி, "என் சகோதரர் 1.5 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே உதவி கிடைத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் ஒருவரும் வரவில்லை" என கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.