வைரல்

UPSC தேர்வில் பீடித்தொழிலாளி மகள் வெற்றி : இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும் நான் முதல்வன் திட்டம்!

ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள்.

UPSC தேர்வில் பீடித்தொழிலாளி மகள் வெற்றி : இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும் நான் முதல்வன் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 2023 ஏப்ரல் மாதம் வெளியானது.

இதைத் தொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன.அதில், 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.இதில் 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற்றவர் என்ற செய்தி வெளியாகி நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றியது. இம்முறை குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்றவர்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் தனது சொந்த முயற்சியில் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளனர் எனும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற மூன்று பெண் ஊழியர்கள் ஒரேநேரத்தில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளனர்.

அதேபோல, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி ஒருவரின் மகள் எஸ். இன்பா என்பவர் ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏழ்மையான ஒரு பீடிதொழிலாளியின் மகள். இவர் பொருளாதார வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே படித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. எனினும், இன்பா விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 851-வது இடத்தை பெற்றுள்ளார்.

இன்பா அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 7500 ரூபாய் உதவித்தொகை பெற்று இத்தேர்விற்கு படித்து வந்தார். 2023ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து மாதம் 25,000 ரூபாய் உதவித்தொகை பெற்றார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிடைத்த உதவித்தொகையால் பொருளாதார தேவைப் பற்றிய கவலையின்றி இன்பா அவர்களால் முழு கவனத்துடன் இத்தேர்விற்காக படித்து வெற்றி பெற முடிந்தது.

படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக இன்பா அவர்களின் வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டுகின்றன.

banner

Related Stories

Related Stories