புதிதாக ஹோட்டல் அல்லது துணிக்கடைகள் திறக்கப்பட்டால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. துணிக்கடைகள் திறந்தால் ரூ.10க்கு கூட துணி விற்பனை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
அதேபோன்று பிரியாணி கடை திறந்ததால் முதலில் வருபவர்களுக்கு ஒரு கிலோ பிரியாணி இலவசமாக வழங்கப்படும். மேலும் 5 பைசா, 10 பைசா, 50 பைசா நாணயங்கள் எடுத்து வந்தால் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சம்பவங்களை நாம் எல்லோரும் பார்த்து இருப்போம்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்த பிரபல பிரியாணி கடை ஒன்று தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிரியாணி போட்டியை நடத்தியுள்ளது.
இந்த போட்டியில், அதிகமாகப் பிரியாணி சாப்பிடும் நபருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த பலரும் போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால் குலுக்கல் முறையில் 35 பேரை ஹோட்டல் நிர்வாகம் தேர்வு செய்து போட்டியை நடத்தியுள்ளது.
இதில் சரவணன் என்ற வாலிபர் ஒரே மூச்சாக 2.5 கிலோ பிரியாணியைச் சாப்பிட்டு முதல் பரிசான ரூ.5000 ஆயிரத்தை வென்றுள்ளார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஹோட்டல் நிர்வாகம் கிஃப்ட் வவுச்சர்களை வழங்கியுள்ளது.