வைரல்

“கன்னத்தில் அறைந்த மணமகன்.. அதேமேடையில் உறவுக்கார வாலிபரை திருமணம் செய்த மணப்பெண்” : நடந்தது என்ன?

மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், அதேமேடையில் உறவுக்கார வாலிபரை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கன்னத்தில் அறைந்த மணமகன்.. அதேமேடையில் உறவுக்கார வாலிபரை திருமணம் செய்த மணப்பெண்” : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம் நேற்று காலை காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு விழா காடாம்புலியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இருதரப்பை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். விருந்து உபசாரமும் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது.

திருமண வரவேற்பு விழாவில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த சமயத்தில் மணமகளின் சகோதரர் உறவுமுறை கொண்ட வாலிபர் ஒருவரும் அங்கு வந்து நடனம் ஆடினார். இது மணமகனுக்கு பிடிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், திடீரென ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மணமகளின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தார். இதில் மணமகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

“கன்னத்தில் அறைந்த மணமகன்.. அதேமேடையில் உறவுக்கார வாலிபரை திருமணம் செய்த மணப்பெண்” : நடந்தது என்ன?

இதை அங்கிருந்தவர்கள் யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திருமண மண்டபமே அமைதியானது. அந்த சமயத்தில், அனைத்து சொந்தங்கள் முன்னிலையில் மேடையில் தன்னை கன்னத்தில் ஓங்கி அறைந்த சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று அறிவித்தபடி மணமகள் கதறி அழுதார்.

மேலும் அவர், இப்போதே இப்படி அடிக்கிறார் என்றால் திருமணத்துக்கு பிறகு எனது வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஆவேசமாக கூறி, திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடமும் உறவினர்களிடமும் கைகூப்பி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மணமகளுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறியபடி தேற்றினர். ஆனால் மணமகளோ, திருமணத்தை நிறுத்துமாறு கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மணமகன் தான் செய்தது தவறு என்று கூறி மணமகள் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இருப்பினும் பெண்வீட்டார் சமாதானம் ஆகவில்லை. பின்னர் பண்ருட்டிக்கு சென்ற மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி செஞ்சி அருகில் உள்ள உறவினர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்தனர். இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். இதையடுத்து உடனே அவர் பண்ருட்டிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் நேற்று காலை மணப்பெண்ணுக்கும், அந்த மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories