கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாட்டில் அதி தீவிரமாக பரவி வருகிறது. முதலாவது அலையின் தாக்கத்தின் போதே மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தாமல் விட்டதன் விளைவாக தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக சாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முழுமுதற் காரணம் மத்திய மோடி அரசின் கையாலாகாதத்தனம் என சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா நோயாளிகளை சுகாதார பணியாளர்கள் கையாளும் விதமும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அரசின் நடவடிக்கையும் நாட்டு மக்களை அதிரவைத்து வருகின்றன.
சாலைகளில் பிணங்களை குவித்து வருவதும் தூக்கி எறிவது, அவசர ஆம்புலன்ஸுக்கு போன் செய்தால் செத்து போ எனக் கூறுவதும் இந்திய அரசின் மீதான கொஞ்சநஞ்ச மதிப்பும் மக்கள் மத்தியில் இழந்து வருவதை அண்மை நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இந்த நிலையில், கர்நாடகாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதிய நோயாளியை ஊழியர் ஒருவர் கழுத்தை நெறிப்பது போன்றக் காட்சியும், நோயாளியை அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்க தேசத்தில் நடந்த ஒன்று என்றும் அதனை சில சமூக விரோதிகள் மக்களை குழப்பும் வகையிலும் பெருந்தொற்று காலத்தில் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தும் வகையிலும் திரித்து வாட்ஸ் அப்பில் உலாவ விட்டு வருகின்றன. இது தொடர்பான செய்தியை altnews செய்தி தளத்தில் கடந்த ஆண்டே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.